31 mantras for Personality Development - புத்தகத்திலிருந்து சில...
இன்றொரு நாள் அதிகமாக உள்வாங்கிக்கொள்கிறேன்!
இந்த உலகில் நாம் பேசுவதை மற்றவர்கள் காது கொடுத்துக் கேட்பதைக் காட்டிலும் இன்பமான சங்கதி வேறு கிடையாது. ஆனால், பிறர் பேசுவதை நாம் காது கொடுத்துக் கேட்டிருக்கிறோமா? எதிராளி ஆரம்பித்த வாக்கியத்தை நாம் முடிப்பது, முழுதாக முடிக்கவிடாமல் நமது கருத்துக்களைத் திணிப்பது, சீரியஸாக மகள் கல்யாணத்தைப் பற்றிய கவலைகளை ஒருவர் பகிரும்போது, 'டீக்கடையில் மசால் வடை போட்டிருப்பானே' என்று நினைவுகளை அலைபாயவிடுவது போன்றவை இருவருக்கும் இடையேயான புரிந்துகொள்ளலை மிக மோசமாகப் பாதிக்கும். உங்கள் உடல் மொழியே நீங்கள் எதிராளிக்கு எவ்வளவு முக்கியத்துவம் கொடுக்கிறீர்கள் என்பதைக் காட்டிக்கொடுத்துவிடும். நீங்கள் சந்திக்கும் ஒவ்வொரு நபரையும் உலகின் முக்கியமான நபராக எதிர்கொள்ளத் தொடங்குங்கள். இன்றொரு நாள் பேசுவதைக் குறைத்து அதிகமாகக் கவனியுங்களேன்!
இன்றொரு நாள் குட்டி விஷயத்துக்கும் குதூகலப்படுங்களேன்!
தெரிந்த முல்லா கதைதான். ஆனாலும், சுவாரஸ்யமானது. சந்தைக்குச் சென்ற முல்லா வழியில் ஒரு நண்பரைச் சந்தித்தார். இரவு சமையலுக்கு ஒரு வாத்து வாங்கி வந்த அவர், மிகவும் சோகமாகக் காணப்பட்டார். என்னவென்று விசாரித்த முல்லாவிடம், ''எப்போதும் ஏதாவது ஒரு சோகம் மனதை வாட்டிக் கொண்டே இருக்கிறது. மகிழ்ச்சியை எங்கே சென்று கண்டுபிடிப்பது என்று தெரியவில்லை!'' என்றார் நண்பர். சட்டென நண்பரின் கையிலிருந்த வாத்தைப் பிடுங்கிக்கொண்டு ஓடத் தொடங்கினார் முல்லா. எதுவும் புரியாத நண்பர் வாத்தை மீட்பதற்காக நண்பரைத் துரத்தத் தொடங்கினார். அங்குமிங்கும் போக்குக்காட்டிய முல்லா, வேண்டுமென்றே வேகத்தைக் குறைத்து நண்பரிடம் மாட்டிக்கொண்டார். வாத்தை முல்லாவிடம் இருந்து பறித்துக்கொண்ட தும் நண்பர் முகத்தில் முழுத் திருப்திப் புன்னகை! ''கண்டுபிடித்துவிட்டீர்களா?'' என்று கேட்டார் முல்லா. புரியாமல், ''எதை?'' என்றார் நண்பர். ''நீங்கள் தேடிய சந்தோஷத்தை!'' என்றார் முல்லா புன்னகை யுடன். கதை புரிந்தவர்களுக்கு வாழ்க்கையும் எளிதில் புரிந்திருக்கும்.
உள்ளம் மகிழ, உற்சாகமாக, பொங்கல், தீபாவளி, திருமணம், பிறந்த நாள், அஜீத் படம், ப்ரமோஷன், நியூ இயர் என்று காத்திருப்பது நம்மவர்களுக்குப் பழகிவிட்டது. எதற்குக் காத்திருக்க வேண்டும்? மழை நேர டீ அத்தனை இதமூட்டியதே, வாசித்த சிறுகதை உற்சாகமூட்டியதே, எஃப்.எம். பாடல் திடீரென மனதை நெகிழ்த்தியதே, பஸ் ஜன்னல் காற்று முடி கலைக்கிறதே என்று ஒவ்வொரு கணத்துக்கும் சந்தோஷப்படலாமே!
இன்றொரு நாள், பல முறை தள்ளிப்போட்ட ஒரு விஷயத்தை முடிப்போமே!
'அப்புறம் பார்த்துக்கொள்ளலாம்' என்று தள்ளிப்போட்ட விஷயங்களைப் பட்டியலிடுங்களேன். பேப்பர் போதாத அளவுக்குப் பட்டியல் நீள்கிறதா! சின்ன வயதில் நம்மிடம் சொல்லியிருப்பார்களே... 'மனதில் நிறைவேறாத ஆசைகளுடன் இறந்து போன வர்களின் ஆன்மா சாந்தியடையாமல் இங்கேயே சுற்றிச் சுற்றி வரும்!' என்று. அது போலத்தான் நீங்கள் முடிக்காத காரியத்தின் சுமை உங்கள் மூளையில் அழுத்தமாகப் படிந்துகிடக்கும். நீங்கள் எதிர்பார்ப்ப தைக் காட்டிலும் அதன் அழுத்தம் அபாரமானது. அது உங்களுடைய எல்லா செயல்களிலும் எதிரொலிக்கும். இரவு உணவைத் தவிர, அன்றைய பணிகள் அனைத்தையும் மாலை 6 மணிக்குள் முடிக்கப் பழகுங்களேன். மனதில் எழும் திருப்தியான நிறைவை, 'ஃபீல் குட் ஃபேக்டர்' என்பார்கள். உங்கள் வாழ்க்கை ஃபீல் குட் லைஃப் ஆக இருக்கும்!
இன்றொரு நாள்தானே... உங்களால் முடியும்!
Subscribe to:
Post Comments (Atom)

No comments:
Post a Comment